செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

Published On 2020-10-12 02:40 GMT   |   Update On 2020-10-12 02:40 GMT
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயவாடா :

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியேற்றது. ஜெகன்மோகன் ரெட்டி அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு எதிராக மாநில ஐகோர்ட்டு சுமார் 100 உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

மாநில தலைநகரை மாற்றும் விவகாரம், சட்ட மேலவை கலைப்பு, மாநில தலைமை தேர்தல் கமிஷனரை மாற்றும் முடிவு போன்றவற்றுக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதைப்போல ஆற்று சூழலியலை பாதுகாப்பதற்காக அவற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என மாநில அரசு எடுத்த முடிவுக்கும் ஐகோர்ட்டு தடை விதித்து இருக்கிறது.

இவ்வாறு தனது அரசின் திட்டங்களுக்கு ஐகோர்ட்டு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போடுவதால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, இவற்றின் பின்னணியில் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக கருதுகிறார். குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி மூலம் மாநில ஐகோர்ட்டு நடவடிக்கைகளை அவர் கட்டுப்படுத்துவதாக ஜெகன்மோகன் ரெட்டி எண்ணுகிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் முந்தைய தெலுங்குதேசம் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதித்துள்ள ஐகோர்ட்டு, அது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் விரக்தியடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மற்றும் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகளுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 6-ந்தேதி எழுதிய அந்த கடிதத்தின் நகலை அவரது முதன்மை ஆலோசகர் அஜெயா கல்லம் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த கடிதத்தை 8-ந்தேதி ஜெகன்மோகன் ரெட்டி அனுப்பியதாக அவர் கூறினார். அந்த 8 பக்க கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:-

ஜனநாயக நிறுவனங்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மூலம் சந்திரபாயு நாயுடு, அரசியல்மயமாக்குவது மிகுந்த வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஒருவர் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆதாரம் இருக்கிறது. தற்போது மாநில நீதித்துறையில் அவரது தலையீடு இருப்பதன் மூலம் அது தெளிவாகி இருக்கிறது.

இதன் மூலம் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மைகள் புலப்படும்.

எனவே மாநில நீதித்துறையின் நடுநிலைமை தொடர்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News