செய்திகள்
சிரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திரா, வேட்பு மனுவை தாக்கல் செய்த காட்சி

கர்நாடகத்தில் 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Published On 2020-10-10 02:20 GMT   |   Update On 2020-10-10 02:20 GMT
கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்), சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திரா மனு தாக்கல் செய்துள்ளார். மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந் தேதி கடைசி நாள் ஆகும். 17-ந் தேதி மனுக்கள் பரிசீலனை, 19-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.

முதல் நாளில் முக்கியமான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் தேசிய கட்சியான பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதித்து வருகிறது.

ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் முனிரத்னா, துளசிமுனிராஜ்கவுடா ஆகிய 2 பேருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால் இவர்களில் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் பா.ஜனதா மேலிடம் திணறி வருகிறது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமானவர்களில் முனிரத்னாவும் ஒருவர் என்பதால் அவருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

ஆனால் பா.ஜனதா மேலிடம், துளசிமுனிராஜ்கவுடாவை களம் இறக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தொகுதியில் இருவரில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தால் தான் பா.ஜனதா இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதை தாமதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலையொட்டி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுகிறவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்தல் பணி தொடர்பான கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். சானிடைசர், சோப்பு, தண்ணீர் அங்கு வைக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அனைவரும் சமூக இடைவெளியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளை ஓட்டுப்பதிவுக்கு ஒரு நாளுக்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி தூய்மைபடுத்த வேண்டும். வாக்குச்சாவடி நுழைவு பகுதியில், வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்தல் ஊழியரோ, ஆஷா மருத்துவ உதவியாளரோ அல்லது துணை மருத்துவ ஊழியரோ ஈடுபடலாம்.

வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை குறிக்கும் குறியீடுகளை வரைய வேண்டும். கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை வாக்காளர்களின் கண்களில் படும்படி ஒட்ட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், முகத்தை முழுமையாக மூடும் கண்ணாடி கவசம், கையுறை போன்றவை வழங்கப்படும்.

மைதானங்களில் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கினால், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News