செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Published On 2020-10-08 16:25 GMT   |   Update On 2020-10-08 16:25 GMT
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மறைவின் மூலம் நாடு ஒரு தொலைநோக்கமுள்ள தலைவரை இழந்துள்ளது. பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் பணியாற்றிவராகவும் அவர் இருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த பஸ்வான் அம்மக்களின் மனங்களை வென்றவர் என தெரிவித்துள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. நான் எனது நண்பரை இழந்துவிட்டேன்.  கடின உழைப்பு மற்றும் உறுதியின் மூலம் அரசியலில் உயர்ந்தவர். ஒரு இளம் தலைவராக அவர்  அவசர காலத்தின் போது நமது ஜனநாயகம் மீதான தாக்குதலை எதிர்த்தார். அவர் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News