செய்திகள்
முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்

இளம்பெண் கற்பழித்து கொலை : எதிர்க்கட்சிகள் மீது யோகி ஆதித்யநாத் தாக்கு

Published On 2020-10-06 22:24 GMT   |   Update On 2020-10-06 22:24 GMT
உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவர், உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் சமீபத்தில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரின் உடலையும் குடும்பத்தினரின் ஒப்புதலின்றி போலீசாரே அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை பார்ப்பதற்கு அரசியல் கட்சியினர், ஊடகத்தினருக்கு தொடக்கத்தில் மாநில அரசு தடை விதித்து இருந்தது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் கதாம்பூர் தொகுதியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் நேற்று மெய்நிகர் முறையில் உரையாற்றும்போது, அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் மத்திய-மாநில அரசுகளால் சில வரலாற்று சிறப்புமிக்க பணிகள் நடந்திருக்கின்றன. 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் மிகப்பெரிய வளர்ச்சிப்பணிகள் நாடு முழுவதும் நடந்திருக்கின்றன. இவற்றை நீங்கள் மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும்.

மாநிலத்தில் நடந்து வந்த முந்தைய காட்டாட்சி முடிவு பெற்றுள்ளது. அந்த ஆட்சியில் தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தை மூடியிருந்தனர். மாறாக தற்போது புதிய முதலீடுகள் மாநிலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா பரவலால் போடப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்களுக்கான உணவு, மருத்துவ உதவி அனைத்தையும் மாநில அரசு செய்ததுடன், அவர்கள் சுயமாக முன்னேறுவதற்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் பார்வையற்ற எதிர்க்கட்சிகள், தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களுக்கு எதுவும் செய்யாத அவர்கள், நாட்டின் அமைதியான சூழலை கெடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்கு சமீபத்திய சம்பவங்களே (ஹத்ராஸ் சம்பவம்) உதாரணமாக விளங்குகின்றன.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
Tags:    

Similar News