செய்திகள்
முற்கம்பி ஆடையுடன் போராடியதாக வைரலாகும் இளம்பெண் புகைப்படம்
முற்கம்பி ஆடை அணிந்து அரசுக்கு எதிராக போராடியதாக கூறி இளம்பெண் புகைப்படம் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி கொடூர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பின்மை சார்ந்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உடல் முழுக்க முற்கம்பி போர்த்திக் கொண்டு நிற்கும் பெண் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பவர், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த தவறிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படத்தில் இருப்பது கொலம்போவை சேர்ந்த சாகச கலைஞர் ஜனனி கூரே ஆகும். இவர் அணிந்திருப்பது இலங்கையின் ஒசரி எனும் பாரம்பரிய உடையை ஆகும்.
அந்த வகையில் முற்கம்பிகளால் ஆன உடை அணிந்து நிற்கும் பெண், பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.