செய்திகள்
டி.கே.சிவக்குமார்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடுகளில் சிபிஐ சோதனை

Published On 2020-10-05 05:15 GMT   |   Update On 2020-10-05 05:15 GMT
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகளில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது குறித்து சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடக அரசும் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 25-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி, கனகபுரா பகுதியில் உள்ள டி.கே.சிவகுமார் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்திவருகின்றனர். 

சிவகுமார் வீடுகள் மட்டுமின்றி பிற பகுதிகளில் உள்ள அவரது அலுவலகங்கள் மற்றும் பண்ணை வீடுகள், அவரது தம்பி சுரேசுக்கு சொந்தமான இடங்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. டி.கே.சிவக்குமார் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுவதாக அவர் கூறி உள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
Tags:    

Similar News