செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2020-10-02 02:17 GMT   |   Update On 2020-10-02 02:17 GMT
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
புதுடெல்லி:

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News