செய்திகள்
ஜிஎஸ்டி

செப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்

Published On 2020-10-01 10:44 GMT   |   Update On 2020-10-01 10:44 GMT
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. 
 
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில் 95,480 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,741 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.23,131 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,484 கோடி அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News