செய்திகள்
ஹத்ராஸ் வன்கொடுமை... நீதி கேட்டு இமாச்சல பிரதேசத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய காங். தொண்டர்கள்
ஹத்ராஸ் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
சிம்லா:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொடர் போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர்.
கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடல் நேற்று அதிகாலை தகனம் செய்யப்பட்டது. போலீசாரின் நெருக்கடியால், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் உடல் தகனம் செய்யப்பட்டதாக பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.