செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீர்: வீட்டில் இருந்து வெளியேறி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞன் 18 நாட்களில் கைது

Published On 2020-09-30 22:26 GMT   |   Update On 2020-09-30 22:26 GMT
காஷ்மீரில் வீட்டில் இருந்து வெளியேறி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞனை 18 நாட்களில் ராணுவத்தினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் பெருமளவில் தடுக்கப்பட்டு வரும் நிலையில் காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேரவைக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபுரா பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞன் கடந்த மாதம் 11-ம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறி மாயமானான்.

பின்னர் சில நாட்களில் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை பதிவு செய்த அந்த இளைஞன் தான் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும், பெற்றோர் தன்னை தேடவேண்டாம் எனவும் அறிவித்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞனின் பெற்றோர் இது குறித்து உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொண்டுத்தனர். 

இதையடுத்து, அந்த இளைஞனை தேடும் முயற்சியில்
பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 18 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் நேற்று அந்த 18 வயது இளைஞனை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். அவனை கைது செய்த பாதுகாப்புப்படையினர் இளைஞனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News