செய்திகள்
பாலியல் வன்கொடுமையால் இறந்த ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்துக்கு ரூ,25 லட்சம் நிதி - உ.பி. முதல் மந்திரி
பாலியல் வன்கொடுமையால் இறந்த ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்துக்கு ரூ,25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்த இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில உள்துறை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட இந்த சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தன்னிடம் பேசிய பிரதமர் மோடி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விட மாட்டோம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமையால் இறந்த ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்துக்கு ரூ,25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். அரசு சார்பில் அவர்களுக்கு வீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.