செய்திகள்
கோப்புப்படம்

‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதி

Published On 2020-09-30 08:59 GMT   |   Update On 2020-09-30 08:59 GMT
கூட்ட நெரிசலை தடுக்கும் நடவடிக்கையாக, ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசும், சுகாதாரத்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோல கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூடுவதை தடுக்க தென்மேற்கு ரெயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரெயிலில் பயணம் செய்யும் உறவினர்கள், நண்பர்களை வழியனுப்ப வருபவர்கள் கூட்டத்தை குறைக்க தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. அதாவது நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட்டை ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியது. பெங்களூரு சிட்டி, கன்டோன்மெண்ட், யஷ்வந்தபுரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக இருந்தது.

இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் உறவினர்கள், நண்பர்களை வழியனுப்ப வருபவர்கள் கூட்ட நெரிசலில் நின்று நடைமேடை டிக்கெட் எடுப்பதை தவிர்க்க, இந்திய ரெயில் நிலைய வளர்ச்சி கழகம் ஒரு புதிய முறையை கையாண்டு உள்ளது. அதாவது ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் நுழைவுவாயில் பகுதியில் 2 கிசோக் எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்களில் ‘கியூ-ஆர்’ கோடு லேபிள் ஒட்டப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்திற்கு உறவினர்கள், நண்பர்களை வழியனுப்ப வருபவர்கள் இனி கவுண்ட்டர்களில் நின்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. இனி தானியங்கி எந்திரங்கள் மூலம் நடைமேடை டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது ‘போன் பே’, ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் தானியங்கி எந்திரங்களில் உள்ள ‘கியூ-ஆர்’ கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி நடைமேடை டிக்கெட்டை எடுத்து கொள்ளலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் 532 பேர் நடைமேடை டிக்கெட் எடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News