செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் 15-ல் ஒருவருக்கு ஆகஸ்டுக்குள் கொரோனா பாதிப்பு - செரோ சர்வேயில் அதிர்ச்சி தகவல்

Published On 2020-09-29 22:39 GMT   |   Update On 2020-09-29 22:39 GMT
இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாதத்துக்குள் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 15-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என 2-வது செரோ சர்வே முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை மதிப்பிட தனிநபர்களிடம் ‘கோவிட் கவாச் எலிசா’ உபகரணம் மூலம் ஐ.ஜி.ஜி. நோய் எதிர்ப்பு பொருளை கண்டறியும் செரோ சர்வே முதன் முதலாக கடந்த மே, ஜூனில் நடத்தப்பட்டது. இதில் நாட்டில் தொற்று நோய் பாதிப்பு 0.73 சதவீதம் எனவும், கடந்த மே மாத தொடக்கத்திலேயே 64 லட்சத்து 68 ஆயிரத்து 388 பேர் கொரோனாவுக்கு ஆளாகி இருக்கலாம் எனவும் தெரிய வந்தது.

இப்போது, கடந்த ஆகஸ்டு 17 முதல் இந்த மாதம் 22-ந் தேதி வரை 2-வது செரோ சர்வே நடத்தி அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை டெல்லியில் நேற்று நிருபர்களிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பலராம் பார்கவா வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* முதல் செரோ சர்வே நடத்தப்பட்ட நாட்டின் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்களில் 2-வது செரோ சர்வே நடத்தப்பட்டது.

* முதல் சர்வேயில் 0.73 சதவீதம் தொற்று பாதிப்பு இருந்த நிலையில், 2-வது சர்வேயில் பாதிப்பு குறைந்துள்ளது.

* 29 ஆயிரத்து 82 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 6.6 சதவீதம் பேரும், 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7.1 சதவீதம் பேரும் கடந்த காலத்தில் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

* கிராமப்புறங்களை காட்டிலும் (4.4 சதவீதம்) நகர்ப்புற குடிசை பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகம். அங்கு 15.6 சதவீதமும், குடிசைகளற்ற பிற பகுதிகளில் 8.2 சதவீதமும் தொற்று இருந்துள்ளது.

* 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 15 பேரில் ஒருவருக்கு தொற்று, ஆகஸ்டு மாதத்துக்குள் ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News