செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் பரபரப்பு: சஞ்சய் ராவத்தை சந்தித்தது ஏன்? - தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

Published On 2020-09-28 01:01 GMT   |   Update On 2020-09-28 01:35 GMT
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பை அடுத்து மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையுமா? என்பதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்தார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால் முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பா.ஜ.க. உடன்படாததால் சிவசேனா கூட்டணியை முறித்தது.

கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கைகோர்த்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. சிவசேனா தலைமையில் ஆட்சி நடந்து வரும் நிலையில், பா.ஜ.க.வுடன் அக்கட்சி மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

இதற்கிடையே, திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார்.

சிவசேனா, பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அரசை அமைக்க காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத் என்று கருதப்படும் நிலையில், அவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதை சஞ்சய் ராவத் மறுத்தார். அவர் கூறுகையில், “ நானும், தேவேந்திர பட்னாவிசும் எதிரிகள் அல்ல. இது எங்களது கட்சி பத்திரிகைக்காக பேட்டி எடுப்பது தொடர்பாக பேச முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதை எங்களது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிந்து இருக்கிறார்” என்றார்.

இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசின் செயல்பாட்டில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த அரசு தானாக கவிழத்தான் போகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். புதிய அரசை அமைப்பதற்காக சிவசேனாவுடன் கைகோர்க்கும் திட்டம் பா.ஜ.க.வுக்கு இல்லை. இதேபோல அந்த அரசை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை.

சஞ்சய் ராவத் என்னை சந்தித்துப் பேசியதில் அரசியல் எதுவும் இல்லை. சாம்னா பேட்டிக்காக என்னை அணுகினார். நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளேன். எனது பேட்டியை அப்படியே பிரசுரிக்க வேண்டும் என்று கூறினேன். பேட்டியின் போது எனது சார்பில் கேமரா வைத்துக் கொள்வேன் என்றும் கூறினேன். இது பற்றி தான் பேசினோம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News