செய்திகள்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்
ஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு டேக்வார் செக்டார் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் மான்கோட் செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதேபோல் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் காலை 11.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து நடத்தி வரும் தாக்குதல்களால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.