செய்திகள்
ராகுல் காந்தி, மன்மோகன்சிங்

மன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல் காந்தி சொல்கிறார்

Published On 2020-09-26 05:53 GMT   |   Update On 2020-09-26 06:05 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள ராகுல் காந்தி அவரைப் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்வதாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தவர் மன்மோகன்சிங். அவர் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார்.

காங்கிரஸ் மேல்-சபை எம்.பி.யான மன்மோகன்சிங் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிப்பில் கூறியிருப்பதாவது:-

மன்மோகன்சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

அவருக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே போல காங்கிரஸ் கட்சியும் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிறந்த நாளை ஒவ்வொரு இந்தியனும் கொண்டாடுகிறார்கள். அவர் உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவராவர். அவர் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றவர் ஆவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News