செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனா பலி 8,500-ஐ நெருங்குகிறது

Published On 2020-09-26 02:27 GMT   |   Update On 2020-09-26 02:27 GMT
கர்நாடகத்தில் மேலும் 86 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8,500-ஐ நெருங்கிறது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 48 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 8,655 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5½ லட்சத்தை தாண்டிவிட்டது.

வைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் வரை 8,331 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 86 பேர் இறந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,417 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 135 பேர், பல்லாரியில் 498 பேர், பெலகாவியில் 150 பேர், பெங்களூரு புறநகரில் 308 பேர், பெங்களூரு நகரில் 4,080 பேர், பீதரில் 44 பேர், சாம்ராஜ்நகரில் 51 பேர், சிக்பள்ளாப்பூரில் 14 பேர், சிக்கமகளூருவில் 87 பேர், சித்ரதுர்காவில் 79 பேர், தட்சிண கன்னடாவில் 217 பேர், தாவணகெரேயில் 142 பேர், தார்வாரில் 256 பேர், கதக்கில் 78 பேர், ஹாசனில் 227 பேர், ஹாவேரியில் 156 பேர், கலபுரகியில் 226 பேர், குடகில் 67 பேர், கோலாரில் 58 பேர், கொப்பலில் 44 பேர், மண்டியாவில் 111 பேர், மைசூருவில் 702 பேர், ராய்ச்சூரில் 113 பேர், ராமநகரில் 49 பேர், சிவமொக்காவில் 183 பேர், துமகூருவில் 176 பேர், உடுப்பியில் 63 பேர், உத்தரகன்னடாவில் 92 பேர், விஜயாப்புராவில் 183 பேர், யாதகிரியில் 66 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 32 பேர், பல்லாரி, சிவமொக்கா தலா 8 பேர், பெலகாவியில் 6 பேர், பாகல்கோட்டை, சாம்ராஜ்நகர், ஹாவேரி, மண்டியாவில் தலா ஒருவர், துமகூரு, விஜயாப்புரா, குடகு, கதக், பீதரில் தலா 2 பேர், பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, ஹாசன், கலபுரகியில் தலா 3 பேர், தார்வாரில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 5,644 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 302 ஆக உயர்ந்து உள்ளது. 98 ஆயிரத்து 474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News