செய்திகள்
பீகார் சட்டமன்ற தேர்தல்- 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடலாம்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநில தேர்தல் நடத்தப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் யாராவது கேட்டுக்கொண்டால் அவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும். குறைபாடு உள்ள வாக்காளர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டு போட சிறப்பு வசதி செய்யப்படும். தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.