செய்திகள்
மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்
மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
புதுடெல்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைந்துள்ளது. மாநிலங்களவையில் இன்று மதியம் 1 மணிக்கு அவை நேரம் முடிவடைந்ததும் இதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘திட்டமிட்ட அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அமளி காரணமாக 3.15 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அவையின் மொத்த அலுவல் செயல்பாட்டு நேரத்தின் 57% நேரம் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய அமர்வுகளைப்போன்று இந்த முறையில் அதிக நேரம் அவை நடைபெற்றுள்ளது’ என்றார்.
இதையடுத்து அவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது.