செய்திகள்
மும்பை கட்டிட விபத்து

மகாராஷ்டிராவில் சோகம் - 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி

Published On 2020-09-21 02:04 GMT   |   Update On 2020-09-21 02:04 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்ட் என்ற இடத்தில்  அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். 

கட்டிட இடிபாடுகளில் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News