செய்திகள்
ஹரிவன்ஸ்

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

Published On 2020-09-20 11:06 GMT   |   Update On 2020-09-20 11:06 GMT
வேளாண் மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவியில் இன்று நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது. 

மேலும், இந்த மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. 

ஆனால், எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஹரிவன்ஸ் இருக்கையின் முன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து தன்னிச்சையாக முடிவெடுத்த மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் 
கொண்டுவர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை செயலரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News