செய்திகள்
பொருளாதார ஊக்கத்தொகுப்பு முறையை மாற்றியமைக்க வேண்டும் -மாநிலங்களவையில் விவாதிக்க காங். எம்பி நோட்டீஸ்
மாநிலங்களவையில் இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜீரோ ஹவரில் விவாதிப்பதற்காக எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜீரோ ஹவரில் விவாதிப்பதற்காக எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பின் முறைகளை மாற்றியமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி ரிபுன் போரா ஜீரோ ஹவர் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இதேபோல் பாஜக எம்பி சரோஜ் பாண்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
மற்றொரு பாஜக எம்பி விவேக் தாக்கூரும் ஜீரோ ஹவர் நோட்டீஸ் வழங்கி உள்ளார். அவர் தனது நோட்டீசில், அனைத்து மாநிலங்களிலும் திட்டமிடப்பட்ட கொரோனா தடுப்பூசியை சீரான முறையில் செயல்படுத்துவதில் தெளிவு தேவை என கூறியிருக்கிறார்.