செய்திகள்
ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்

ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாரித்த பொருட்கள் மட்டும் விற்பனையா? மத்திய மந்திரி பதில்

Published On 2020-09-19 22:03 GMT   |   Update On 2020-09-19 22:03 GMT
ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாரித்த பொருட்களை மட்டுமே விற்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கூறினார்.
புதுடெல்லி:

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டில் தயாரித்த பொருட்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இந்த ‘சுய சார்பு இந்தியா’ திட்டத்துக்கு பல்வேறு துறைகளும் ஆதரவு அளித்து உள்ளன.

அந்தவகையில், இந்தியாவில் தயாரித்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தவும், விற்கவும் ராணுவ அமைச்சகம் பரிசீலித்து வருகிறதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் பதிலளிக்கையில், ‘ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாரித்த பொருட்களை மட்டுமே விற்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று கூறினார். ராணுவ கேண்டீன்கள் மூலம் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.17,190 கோடியும், 2018-19-ல் ரூ.18,917 கோடியும், 2019-20-ல் ரூ.17,588 கோடியும் மொத்த விற்றுமுதல் நடந்ததாக கூறிய ஸ்ரீபாத் நாயக், இந்த நிதியாண்டில் கடந்த மாதம் வரை ரூ.3,692 கோடி விற்றுமுதல் நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

37 விமானப்படை தளங்களை நவீனப்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு ‘ஆம்’ என ஸ்ரீபாத் நாயக் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இரவு நேர நடவடிக்கைகள் உள்ளிட்ட கடினமான வானிலை காலங்களில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விமானப்படை தளங்களின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு உள்ளது’ என்றும் கூறினார்.
Tags:    

Similar News