செய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கொரோனா இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன்

Published On 2020-09-19 02:54 GMT   |   Update On 2020-09-19 02:54 GMT
பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 9.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தொடர்ந்து மருத்துவத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். 

கொரோனா பாதிப்பில் 14வது இடத்தில் உள்ள பிரிட்டனில் 3.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்படுகள் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். 

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News