செய்திகள்
எடியூரப்பா

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கமா?: கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு

Published On 2020-09-19 02:09 GMT   |   Update On 2020-09-19 02:09 GMT
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கர்நாடக அரசியலில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றி வருபவர் எடியூரப்பா. அவருக்கு தற்போது 78 வயதாகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. ஆனால் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருப்பதால் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால், 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் புதிய தலைவர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதற்காக எடியூரப்பாவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி அவரது செல்வாக்கை உயர்த்தினால் தான் வாக்குகளை பெற முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போடுகிறது. எடியூரப்பாவின் பதவி காலம் இன்னும் 31 மாதங்கள் தான் உள்ளது.

எடியூரப்பாவுக்கு மாற்றாக தற்போது துணை முதல்-மந்திரியாக உள்ள லட்சுமண் சவதியை முன்னிறுத்துவது குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஆனால் கட்சியில் அவருக்கு ஆதரவு குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது. அவரை நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது தொழில் துறை மந்திரியாக உள்ளவருமான ஜெகதீஷ்ஷெட்டரை டெல்லிக்கு வரவழைத்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

எடியூரப்பாவை போலவே ஜெகதீஷ் ஷெட்டரும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான். எனவே ஜெகதீஷ் ஷெட்டரை முதல்-மந்திரியாக நியமித்தால் அதன் மூலம் பா.ஜனதாவுக்கான லிங்காயத் வாக்கு வங்கிகளை தக்கவைத்து கொள்ள முடியும் என்றும் பா.ஜனதா மேலிடம் நம்புகிறது. மேலும் அவர் மூத்த அரசியல் அனுபவம் கொண்டவர். ஏற்கனவே ஓராண்டு முதல்-மந்திரியாக பணியாற்றியவர். ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு என்பது இல்லை. எடியூரப்பா கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதிய கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்றார். அவருக்கு லிங்காயத் மட்டுமின்றி பிற சமூகங்களிலும் பலத்த ஆதரவு உள்ளது. அதனால் பா.ஜனதாவில் எடியூரப்பாவை தவிர்த்து மற்ற தலைவர்களுக்கு வாக்குகளை ஈர்க்கும் செல்வாக்கு இல்லை என்றே கூறப்படுகிறது. அத்தகைய பலம் வாய்ந்த தலைவரை ஒதுக்கிவிட்டு, பா.ஜனதா வெற்றி வாகை சூட முடியுமா? என்பதும் கேள்விக்குறியே.

அதனால் எடியூரப்பாவை அவ்வளவு எளிதாக நீக்கிவிட முடியாது என்று அரசியல் சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் எடியூரப்பாவுக்கு மாற்றாக புதிய தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பா.ஜனதா மேலிடம் உள்ளது. எடியூரப்பாவை எப்படி அக்கட்சி சமாளிக்கப்போகிறது என்பது முக்கியமான கேள்வி.

அவர் கை காட்டும் நபருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கலாம் அல்லது அவரது மகனுக்கு மந்திரி பதவி வழங்கி அவரை சமாதானம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அடுத்த 3 ஆண்டுகளும் நானே முதல்-மந்திரியாக இருப்பேன என்று கூறி வரும் எடியூரப்பா, மேலிடம் முன்வைக்கும் சூத்திரத்தை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tags:    

Similar News