செய்திகள்
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள்

கர்நாடகத்தில் நீட் தேர்வை 1.19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்

Published On 2020-09-14 03:19 GMT   |   Update On 2020-09-14 03:19 GMT
கர்நாடகத்தில் நீட் தேர்வை 1.19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். கொரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
பெங்களூரு :

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேருவதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு 13-ந் தேதி(அதாவது நேற்று) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நேற்று கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. கர்நாடகத்தில் பெங்களூரு, பெலகாவி, தாவணகெரே, தார்வார், உப்பள்ளி, கலபுரகி, மங்களூரு, மைசூரு மற்றும் உடுப்பி ஆகிய 9 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அந்த 9 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

கர்நாடகத்தில் நீட் தேர்வு எழுத ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 626 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். கொரோனா காரணமாக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே ஆடைகள், செருப்பு அணிவது, நகைகள் அணிவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

அதாவது மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்வு நடந்தாலும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்து மாணவ, மாணவிகள் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வருகை தந்திருந்தனர். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்ததால், முக கவசம் அணிந்தபடி மாணவர்கள் வந்திருந்தனர். மேலும் 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி பாட்டில் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்களின் உடல் வெப்ப நிலையை நுழைவு வாயிலில் வைத்தே தேர்வு மைய ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்து உள்ளே அனுப்பினர். கொரோனா காரணமாக ஒரு அறையில் குறைந்த அளவு மாணவ-மாணவிகளே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருந்தது. நீட் தேர்வு எழுத ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 626 மாணவ, மாணவிகள் தேர்வு விண்ணப்பித்திருந்தாலும், சில மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்றும், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் என்றும், எந்த விதமான பிரச்சினைகளும் எழவில்லை என்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா காரணமாக மாணவ, மாணவிகள் முக கவசத்தை அணிந்தபடியே தேர்வை எழுதி இருந்தனர்.
Tags:    

Similar News