செய்திகள்
குமாரசாமி

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது: குமாரசாமி வலியுறுத்தல்

Published On 2020-09-14 02:51 GMT   |   Update On 2020-09-14 02:51 GMT
போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில் எந்தவித இடையூறும் இல்லாமல் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையையும், இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போதைப்பொருள் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். குறிப்பாக விசாரணைக்கு, அரசியல் தலையீடு உள்ளிட்ட எந்த விதமான இடையூறுகளும் ஏற்படக்கூடாது. போதைப்பொருள் விவகாரத்தில் சூதாட்ட விடுதி (கேசினோ) பற்றி அதிகஅளவில் பேச்சு அடிபடுகிறது. நமது மாநிலத்தில் சூதாட்ட விடுதிகள் இல்லை.

ஆனால் நமது மாநிலத்தில் இரவு நேர விருந்து நடைபெற்று வருகிறது. பெங்களூரு நகரில் நள்ளிரவு 12 மணியளவில் எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால், நாம் இந்தியாவில் தான் வசிக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதியில் இரவு விருந்து நடக்கிறது.

ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ, கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. நான் உள்பட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் இலங்கைக்கு சென்றது உண்மைதான். நாங்கள் சென்ற நோக்கம் வேறு. அதுக்கும், போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய நண்பர் இலங்கைக்கு சென்றது குறித்து தற்போது எதற்காக தெரிவித்தார் என்பது தெரியவில்லை. இலங்கைக்கு நான் சென்றிருப்பதை கூறினால், வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கலாம் என்பதற்காகவும் கூறி இருக்கலாம்.

நான் முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். இதற்காக போலீசாருக்கு முழு அதிகாரம் கொடுத்திருந்தேன். இரவு நேரங்களில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளை கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தேன். போலீசாரும் சட்டவிரோதமாக நடைபெற்ற இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு கடிவாளம் போட்டு இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News