செய்திகள்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

சீனாவுடன் எல்லை மோதல்... முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Published On 2020-09-11 10:13 GMT   |   Update On 2020-09-11 10:13 GMT
இந்தியா-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, இந்திய தரப்பினர் மீது அபாண்டமாக பழி போட்டது. இதனால் லடாக்கில் இரு தரப்புகளும் படைகளை குவித்து, தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து சீனா எல்லையில் படைகளை குவித்து உள்ளது. இதனால், எல்லைப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே நேற்று இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசினர். இதில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்துக்கு இருவரும் ஒப்புதல் அளித்தனர்.

எல்லையில் பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4  நிலை அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மலைத்தொடரில் தனது நிலைகளை அமைத்துள்ளனர்.  அந்த இடத்தை விட்டு சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிங்கர் 4 பகுதியில் உள்ள மலைத்தொடரில் தொடர்ந்து தனது நிலைகளை அமைத்து வந்தனர்.

சீனாவிற்கு பதிலடி தரும் வகையில், பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைப்பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் நிலைகளை கண்காணிக்கும் வகையில் இந்த மலைப்பகுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் சீன படைகள் எந்தவித ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் பிரிகேட் கமாண்டர் அளவிலான சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News