செய்திகள்
நடிகை ரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா, அவரது சகோதரர் உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மும்பை:
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.
போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பான குற்றச்சாட்டில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ரியா, ஷோவிக், அப்துல் பாசித், ஜாயித் விலாத்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ரியா தரப்பில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.