செய்திகள்
உச்சநீதிமன்றம்

இ.எம்.ஐ. காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2020-09-10 08:06 GMT   |   Update On 2020-09-10 08:06 GMT
இ.எம்.ஐ. காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரானா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என எதுவும் இயங்காததால் பொருளாதார சூழல் பாதிக்கப்பட்டு, பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை(இ.எம்.ஐ.) செலுத்துவது மற்றொரு பாரமாக மாறியது. இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இ.எம்.ஐ. செலுத்துவதற்கும் வீடு, கார், உள்ளிட்ட வங்கிக்கடன்களை செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது.

இதனை தொடர்ந்து மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மறுபடியும் கால நீட்டிப்பு செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் ஒத்திவைப்பு சலுகை தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதே நேரத்தில் ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டி மேல் வட்டி போட்டு வங்கிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் வசூல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பயன்படுத்தி இ.எம்.ஐ. தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இ.எம்.ஐ. தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இ.எம்.ஐ. கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு இ.எம்.ஐ. கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News