செய்திகள்
இந்தியா சீனா மோதலின் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
இந்தியா சீனா இடையே எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - சீனா எல்லையான லடாக் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. அதில் இருந்து லடாக் எல்லையில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதி கொண்ட போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது இந்தியா சீனா இடையே நடைபெற்ற கூட்டு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த ராணுவ பயிற்சி 2016 ஆம் ஆண்டு லடாக்கில் நடைபெற்றது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படம் இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.