செய்திகள்
தாவூத் இப்ராகிம் சார்பில் பேசுகிறேன்... முதல்மந்திரியிடம் பேச வேண்டும்... - மகாராஷ்டிர முதல்மந்திரியின் வீட்டிற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு
மகாராஷ்டிர முதல்மந்திரியின் வீட்டிற்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் தான் தாவூத் இப்ராகிம் சார்பில் பேசுவதாகவும், முதல்மந்திரியிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பையின் பாந்த்ராவில் உள்ளது. இங்கு மதோஸ்ரீ என்ற பெயருடைய வீட்டில் முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடம் வசித்து வருகிறார்.
இந்நிலையில், முதல்மந்திரியின் வீட்டில் உள்ள ஒரு தொலைபேசிக்கு இன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தான் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனுமான தாவூத் இப்ராகினின் சார்பில் பேசுவதாகவும், மகாராஷ்டிர முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் பேச வேண்டும் எனவும்
கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதல்மந்திரியின் வீட்டில் பணியில் இருந்த அதிகாரி இந்த தொலைபேசி அழைப்பை துண்டித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த அதிகாரி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்மந்திரியின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மொத்தம் 2 முறை வந்த இந்த அழைப்பு தொடர்பாகவும், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது, தொலைபேசியில் பேசிய மர்ம நபர் யார் என்பது தொடர்பாகவும் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்மந்திரியின் வீட்டிற்கு பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் சார்பில் பேசுகிறேன் என மர்ம நபர் தொலைபேசியில் அழைப்பு விடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.