செய்திகள்
சுமந்து செல்லப்பட்ட கர்ப்பிணி

சத்தீஷ்காரில் பாடை கட்டி சுமந்து செல்லப்பட்ட கர்ப்பிணி

Published On 2020-09-02 22:26 GMT   |   Update On 2020-09-02 22:26 GMT
சத்தீஷ்காரில் பாடை சுமப்பதுபோல 4 பேர் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஷ்கார்:

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜப்லா என்ற கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை. இருக்கிற பழுதடைந்த சாலையில் எதிரே மற்றொரு வாகனம் வந்துவிட்டால் இரண்டுமே திக்கித்திணற வேண்டிய அவல நிலை இருக்கிறது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சாவித்ரி பாய் என்ற 27 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென வயிற்றில் வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்தனர். இதற்காக ஆம்புலன்சை அழைத்தாலும் அது ஊருக்குள் வர முடியாத சூழல் உள்ளது.

எனவே 2 நீண்ட மூங்கில் கம்புகளில் படுக்கை அமைத்து அதில் கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்தனர். பின்னர் பாடை சுமப்பதுபோல 4 பேர் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து சென்றனர். அருகில் உள்ள அம்பகச்சர் கிராமம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கர்ப்பிணி பெண், பாடையில் வைத்து சுமந்து செல்லப்பட்டார்.

பின்னர் தனியார் வாகனத்தில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆஸ்பத்திரியிலும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இது பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.என்.துபே கூறும்போது, “கர்ப்பிணி பெண்ணின் நிலை பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தபோது, ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தும்படி அவர்களது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்கள் தனியார் வாகனத்தின் உதவியின் மூலமே ஆஸ்பத்திரிக்கு சென்றடைந்து உள்ளனர்” என்றார்.
Tags:    

Similar News