செய்திகள்
மத்திய மந்திரிசபை

காஷ்மீரில் இந்தி உள்பட மேலும் 3 அலுவல் மொழிகள் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2020-09-02 21:50 GMT   |   Update On 2020-09-02 21:50 GMT
காஷ்மீரில் கூடுதலாக இந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக சேர்க்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உருது, ஆங்கிலம் ஆகியவை ஏற்கனவே அலுவல் மொழிகளாக உள்ளன. அத்துடன், காஷ்மீரி, டோக்ரி, இந்தி ஆகிய மொழிகளையும் அலுவல் மொழிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்படும். இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் தேர்வுக்கு பிந்தைய சீர்திருத்தங்கள் கொண்டுவருவதற்காக ‘மிஷன் கர்மயோகி’ என்ற திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கடந்த வாரம், தேர்வுக்கு முந்தைய சீர்திருத்தத்துக்காக ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

இது, மத்திய அரசின் மிகப்பெரிய மனிதவள மேம்பாட்டு திட்டம் ஆகும். ஒரு அரசு ஊழியரை நாட்டுக்கு சேவை செய்யும் கர்மயோகியாக அவதாரம் எடுக்க வைப்பதே இதன் நோக்கம்.

இந்தியா-பின்லாந்து இடையே புவியியல் மற்றும் கனிமவள துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும், பின்லாந்து புவியியல் ஆய்வு நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

ஜப்பான் சந்தைக்கான இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா-ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News