செய்திகள்
ப.சிதம்பரம்

நீங்கள் உருவாக்கிய பேரழிவுக்கு கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள் - ப.சிதம்பரம் தாக்கு

Published On 2020-09-01 16:59 GMT   |   Update On 2020-09-01 16:59 GMT
நீங்கள் உருவாக்கிய பேரழிவுக்கு கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி. வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழ்நிலை ஏற்பட்டு உருவாகி இருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. வேளாண் துறையைத் தவிர அனைத்துத் துறைகளும் மோசமான சரிவைச் சந்தித்து இருந்தன.

இந்நிலையில், மனிதன் உருவாக்கிய பேரழிவுக்குக் கடவுளின் மீது பழி போடாதீர்கள் என முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை சாடியுள்ளார்.

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மனிதன் உருவாக்கிய பேரழிவுக்குக் கடவுளின் மீது பழி போடாதீர்கள். அரசின் நிவாரண திட்டம் ஒரு நகைச்சுவை.

கடவுளைக் குற்றம் சொல்லாதீர்கள். சொல்லப்போனால் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். கடவுள் இந்த நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்துள்ளார். இந்த பெருந்தொற்று ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் இந்த இயற்கை பேரழிவையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவையும் கலந்து பேசுகிறீர்கள்.

மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவில் சரியாகும் என மூத்த பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் கூறிவருகிறார். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. கடைசியாக அவர் எப்போது பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News