செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவலாக பலரை பாதித்துள்ளன. பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை. இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதன்பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த 18ந்தேதி காலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.