செய்திகள்
பிரதமர் மோடி, சித்தராமையா

நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு, சித்தராமையா கடிதம்

Published On 2020-08-28 03:19 GMT   |   Update On 2020-08-28 03:19 GMT
கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு நிலச்சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து அமல்படுத்தி உள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு, நிலச்சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி, அந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த சட்டசபையில் எந்த விதமான விவாதமும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் ஒரு தலைபட்சமாக முடிவு எடுத்து அந்த சட்ட திருத்தத்தை அரசு அமல்படுத்தி இருக்கிறது. நிலச்சீர்திருத்த சட்டம் 1961-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை ஏ.பி.சி. என 80 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் கர்நாடக வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது. நமது நாடு விவசாயத்தை நம்பியே இருக்கிறது. விவசாய நிலம், விவசாயிகளின் உயிர் நாடி ஆகும்.

இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிட்டது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து ரியல்எஸ்டேட், பிற தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளை கூலி வேலைக்கு செல்ல வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து விவசாயிகளிடம் எந்த விதமான கருத்துகளையும் அரசு கேட்கவில்லை. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் வகையில், கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள இந்த சட்ட திருத்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். அந்த சட்ட திருத்தத்திற்கு பிரதமர் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News