செய்திகள்
ரியா சக்ரபோர்த்தி

என்னை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள் - நடிகை ரியா சக்ரபோர்த்தி உருக்கம்

Published On 2020-08-27 17:05 GMT   |   Update On 2020-08-27 17:05 GMT
சுஷாந்த் சிங் மரணத்திற்கு நான்தான் காரணம் என்றும், என்னை பயங்கரவாதி போலவும் நடத்துகிறார்கள் என நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
மும்பை:

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் வந்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்தது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். அவர்கள் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை பாந்த்ரா காவல் நிலையம், சுஷாந்த் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே,  நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணத்திற்கு  நான்தான் காரணம் என்றும், என்னை பயங்கரவாதி போலவும் நடத்துகிறார்கள் என நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ரியா சக்ரபோர்த்தி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னால் இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சுஷாந்த்தை விரும்பினேன். நான் அவரை உடனிருந்து பார்த்துக் கொண்டேன். அந்த மனிதத்தன்மை கூட யாருக்கும் இல்லை.

நானும் என்னுடைய குடும்பமும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளோம். பெரிய ரவுடிகள் என் வீட்டிற்கு வெளியே என்னை தாக்க எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது. நானும், என் குடும்பமும் மிகுந்த பயத்தோடு வாழ்ந்து வருகிறோம். என் குடும்பத்தை ஏன் இப்படி தொல்லை செய்கிறீர்கள்.

சி.பி.ஐ. விசாரணை முடிவுகள் வரும் வரை ஏன் உங்களால் காத்திருக்க முடியவில்லை. எனக்கு சி.பி.ஐ. விசாரணை மீது நம்பிக்கை உள்ளது.  சி.பி.ஐ. விசாரணை மீது நம்பிக்கை இருப்பதால்தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து இருப்போம்.

என் அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தவர். 25 வருடம் என் அப்பா ராணுவத்தில் இருந்தார். ஆனால் இப்போது எங்களை பயங்கரவாதிகளை போல நடத்துகிறார்கள்.

என் வாழ்க்கையில் போதை பொருட்களை எடுத்தது கிடையாது. எந்த போதை பொருள் டீலரிடம் நான் இதுவரை பேசியது கிடையாது. நான்தான் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்தேன் என்று பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். வேண்டுமானால் என்னுடைய ரத்தத்தை சோதனை செய்து கொள்ளுங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News