செய்திகள்
சோனியா காந்தி

நீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு - காங்கிரஸ் ஆளும் மாநில முதல்மந்திரிகளுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை

Published On 2020-08-25 20:34 GMT   |   Update On 2020-08-25 20:34 GMT
நீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகள், மகாராஷ்டிரா,மேற்குவங்காள முதல்மந்திரிகளுடன் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநில முதல்மந்திரிகளுடனும், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநில முதல்மந்திரிகளுடனும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். 

வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் நீட், ஜேஇஇ தேர்வுகள் தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News