செய்திகள்
திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கை வெளியானது
ஆனால், இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும்.
ஜேஇஇ தேர்வு நடைபெறும் மையங்கள் 570ல் இருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் 2,546ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.