செய்திகள்
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட், ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரவல் நேரத்தில் நீட்,. ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் . மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது நமது கடமை என பதிவிட்டுள்ளார்.