செய்திகள்
சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவராக தொடர விருப்பம் இல்லை - சோனியாகாந்தி

Published On 2020-08-24 06:24 GMT   |   Update On 2020-08-24 06:24 GMT
காங்கிரஸ் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக தயார் எனவும், தலைவராக தொடர விருப்பம் இல்லை என்றும் சோனியா காந்தி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காங்கிரசுக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வர வேண்டும் என புத்தகம் ஒன்றுக்கு பிரியங்கா காந்தி அளித்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அக்கட்சிக்குள் எழுந்தன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் எழுச்சியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், காங்கிரசின் ஆதரவுத்தளம் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை ஆகியவை குறைந்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைவராலும் அறியப்பட்ட, முழுநேரம் துடிப்புடன் செயல்படும் சிறந்த தலைமை வேண்டும் என்றும் அக்கடிதம் வலியுறுத்தியுள்ளது. அக்கடிதத்தில் குலாம் நபி ஆசாத், சசி தரூர், கபில் சிபல், மனீஷ் திவாரி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் மாநிலத்திலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக, மூத்த தலைவர்களின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக தயார் எனவும், தலைவராக தொடர விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News