செய்திகள்
பாதுகாப்பு படையினர்

காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்

Published On 2020-08-19 14:34 GMT   |   Update On 2020-08-19 14:34 GMT
காஷ்மீரில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரில் 10 ஆயிரம் பேரை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 

மேலும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்த நடவடிக்கைகளின்போது ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் நிலைமை சுமூகமாக உள்ளதையடுத்து, கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள படைகளில் இருந்து 100 கம்பெனி படையினரை  (சுமார் 10 ஆயிரம் வீரர்கள்) வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 

மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படையினர் உள்பட சுமார் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் பாதுகாப்பு படையினர் வாபஸ் பெறப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னதாக 1,000 மற்றும் 7,200 என்ற எண்ணிக்கையில் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News