செய்திகள்
காஷ்மீரில் தொகுதி எல்லைகள் மறுவரையறை பணி நடைபெற்று வருகிறது - பிரதமர் மோடி பேச்சு
ஜம்மு காஷ்மீரில் தொகுதி எல்லைகள் மறுவரையறுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதன் மூலம் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-
’ஜம்மு காஷ்மீரில் தொகுதி எல்லை மறு வரையறுக்கும் டி லிமிட்டேஷன் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் நிறைவு செய்ய நாடு உறுதியாக உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததால் அங்கு தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய டி லிமிட்டேஷன் கமிஷன் எனப்படும் தொகுதி எல்லை மறுவரையறை செய்யும் குழு உள்ளது. இந்த குழு மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த மறுவரையறை குழு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். மக்கள் தொகை தொகுதி மறுவரையறையில் முக்கிய அங்கம் வகிக்கும். இந்த அமைப்பின் உத்தரவுகள் நீதித்துறையால் மாற்றியமைக்க முடியாது.
இந்த அமைப்பால் தெரிவிக்கப்படும் உத்தரவுகள் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். ஆனாலும், மறுவரையறை
குழு தெரிவித்துள்ள உத்தரவுகளில் மாற்றம் செய்ய அனுமதி கிடையாது.