செய்திகள்
மதுபானக் கடைகளை திறக்கும்போது, உடற்பயிற்சி கூடங்களை ஏன் திறக்கக்கூடாது: பட்நாவிஸ் கேள்வி
மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கும்போது, உடற்பயிற்சி கூடங்களை ஏன் திறக்கக் கூடாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தொட்டுள்ளது, மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று மட்டும் இங்கே 11,813 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 5,60,126 ஆக உயர்ந்துள்ளது. 19,063 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த 5-ந்தேதியில் இருந்து உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளித்தது. மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், 2-ம் கட்ட அலைக்கு சென்று விடக்கூடாது என்பதால் உடற்பயிற்சி கூடங்களை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கவில்லை.
உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அம்மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
பட்நாவிஸ் அந்த கடிதத்தில் ‘‘நீங்கள் மதுபானக்கடைகளை திறக்கும்போது, ஏன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கவில்லை. மாநிலத்தின் நிதி ஆதாரம் உயர வேண்டியது அவசியம்தான். ஆனால், இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது’’ என்று தெரிவித்துள்ளார்.