செய்திகள்
ஒரு ரூபாய்

கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி

Published On 2020-08-12 23:25 GMT   |   Update On 2020-08-12 23:25 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று, மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடும் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்காள மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்துப் பாடப்பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் உள்ளன.

இதுதொடர்பாக, அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா மும்பை மிர்ரர் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம்போல் ரூ. 60 ஆக இருக்கும். இருப்பினும், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருக்கும்.

மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணம் ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக குழு முடிவு செய்தது. கொரோனா தொற்று மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர் பலர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News