செய்திகள்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மரணம் - ராகுல், பிரியங்கா இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மரணத்துக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்றார். அதன்பின், வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், ராஜிவ் தியாகியின் மரணத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், காங்கிரஸ் கட்சி தன் சிங்கங்களில் ஒன்றை இழந்து விட்டது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், ராஜிவ் தியாகியின் மரணத்துக்கு மபி முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.