செய்திகள்
பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Published On 2020-08-12 18:51 GMT   |   Update On 2020-08-12 18:51 GMT
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறினார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த திட்டம், நேரடி வரிகள் சீர்திருத்த பயணத்தை மேலும் முன்னெடுத்து செல்லும்.

சமீபகாலமாக நேரடி வரிகள் பிரிவில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கம்பெனி வரி, 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய உற்பத்தி கூடங்களுக்கு 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. லாப ஈவு பகிர்வு வட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த வரி சீர்திருத்தங்களின் நோக்கம், வரி குறைப்பு மற்றும் நேரடி வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது ஆகும். வருமான வரித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வரி தாவாக்களுக்கு தீர்வு காண ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கலுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்’ தொகை விரைவாக திருப்பி அளிக்கப்படுகிறது.

மின்னணு பண பரிமாற்ற முறைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News