செய்திகள்
மூணாறு நிலச்சரிவு பகுதியில் முதல்மந்திரி பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு
கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 70-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.
இதையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
5 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 16 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமாலையின் பெட்டிமுடி பகுதியை கேரள மாநில முதல்மந்திரி பினராயி விஜயனும், மாநில கவர்னர் ஆரிப் முகமது கானும் இணைந்து நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த தகவலை முதல்மந்திரி அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.