செய்திகள்
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு
சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஆகஸ்டு 31-ம் தேதி வரை தடை நீட்டிக்கப் படுகிறது என மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தா:
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழக தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது.
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்காள அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ள நகரங்களில் இருந்து (டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத்) கொல்கத்தாவுக்கு விமானங்கள் வருவதற்கான தடை வரும் 31-ம் தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளது.